கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்


கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
x

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். மேலும் ரோந்து கப்பலால் மோதி மீனவர்களின் படகை சேதப்படுத்தினர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு துறைமுக பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 300-க்கும் அதிகமான விசைப்படகுகளில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மண்டபத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகு ஒன்றில் சுப்பிரமணி, மனோகரன், வெள்ளைச்சாமி, மலைக்கல்லன் ஆகிய 4 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.

கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது ரோந்து கப்பல் ஒன்றில் வந்த இலங்கை கடற்படையினர் கப்பலை வைத்து இந்த படகின் மீது மோதினர். இதில் படகு சேதம் அடைந்தது. மேலும் படகில் ஏறி மீனவர்கள் பிடித்து வைத்திருந்த பலவகை மீன்களை அள்ளி சென்றதுடன் மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

பரபரப்பு

சேதம் அடைந்த படகுடன் 4 மீனவர்களும் நேற்று காலை மண்டபம் பகுதிக்கு கரை திரும்பினார்கள். சேதமடைந்த மீன்பிடி விசைப்படகை மத்திய, மாநில உளவு பிரிவு மற்றும் கடலோர போலீசாரும் பார்வையிட்டனர். மேலும் 4 மீனவர்களிடமும் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.


Next Story