வால்பாறை, பொள்ளாச்சியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவு-மாணவ-மாணவிகள் இனிப்புகள் வழங்கி உற்சாகம்


வால்பாறை, பொள்ளாச்சியில்  எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவு-மாணவ-மாணவிகள் இனிப்புகள் வழங்கி உற்சாகம்
x
தினத்தந்தி 20 April 2023 6:45 PM GMT (Updated: 20 April 2023 6:45 PM GMT)

வால்பாறை, பொள்ளாச்சியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவு பெற்றதையடுத்து மாணவ-மாணவிகள் இனிப்புகள் வழங்கி உற்சாகம் அடைந்தனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை, பொள்ளாச்சியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவு பெற்றதையடுத்து மாணவ-மாணவிகள் இனிப்புகள் வழங்கி உற்சாகம் அடைந்தனர்.

10-ம் வகுப்பு தேர்வு நிறைவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வை பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் 4750 பேரும், மாணவிகள் 4560 பேரும் சேர்த்து மொத்தம் 9310 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் மாணவர்கள் 4498 பேரும், மாணவிகள் 4417 பேரும் சேர்த்து மொத்தம் 8915 பேர் தேர்வு எழுதினார்கள். மாணவர்கள் 257 பேரும், மாணவிகள் 155 பேரும் சேர்த்து மொத்தம் 412 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தனித்தேர்வர்கள் மாணவர்கள் 126 பேரும், மாணவிகள் 73 பேரும் சேர்த்து மொத்தம் 199 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் மாணவர்கள் 121 பேரும், மாணவிகள் 51 பேரும் சேர்த்து 182 பேர் தேர்வு எழுதினர். மாணவர்கள் 5 பேரும், மாணவிகள் 12 பேரும் சேர்த்து 17 பேர் தேர்வு எழுத வரவில்லை. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறையில் 47 தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று தேர்வு நிறைவடைந்தது. இதை தொடர்ந்து மாணவ-மாணவிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். ஆனைமலை பகுதியில் மை தெளித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் இனிப்புகள் வழங்கி உற்சாகம் அடைந்தனர்.

மாணவ-மாணவிகள் நெகிழ்ச்சி

இதேபோல் வால்பாறை பகுதியில் தனியார் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி அரசு உயர் நிலைப் பள்ளி தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆக மொத்தம் 11 பள்ளிக் கூடங்களைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் கடந்த 6-ந் தேதி முதல் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை எழுதினார்கள். இதில் நேற்று நடைபெற்ற சமூக அறிவியல் பாடத் தேர்வுடன் பொதுத் தேர்வுகள் முடிவடைந்தது. தேர்வு எழுதிய மாணவ- மாணவிகள் தங்களுக்குள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். வால்பாறை அருகில் உள்ள சோலையாறு அணை அரசு மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் 10- வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ -மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி அனைவரும் தேர்ச்சி பெற்று பிளஸ்-1 வகுப்பில் நல்ல பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து நல்ல வாழ்க்கை பாதையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று வாழ்த்திய சம்பவம் மாணவ-மாணவிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story