இலந்தை பழம் சீசன் தொடக்கம்


இலந்தை பழம் சீசன் தொடக்கம்
x
தினத்தந்தி 9 Feb 2023 7:00 PM GMT (Updated: 9 Feb 2023 7:01 PM GMT)

சத்திரப்பட்டி பகுதியில் இலந்தை பழம் சீசன் தொடங்கியது

திண்டுக்கல்


சத்திரப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களான ராமபட்டிணம்புதூர், சிந்தலவாடம்பட்டி ஆகிய பகுதிகளில் கொய்யா, தென்னை சாகுபடி அதிகமாக நடைபெறுகிறது. மேலும் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் இலந்தை, களாக்காய் உள்ளிட்ட மானாவாரி செடி, மரங்களும் அதிகமாக உள்ளன. சீசன் காலத்தில் இவற்றில் விளையும் காய், பழங்களை விவசாயிகள் பறித்து சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

தற்போது சத்திரப்பட்டி பகுதியில் இலந்தை பழம் சீசன் தொடங்கி உள்ளது. குறிப்பாக மலையடிவார பகுதியில் உள்ள மரங்களில் காய்த்து குலுங்கும் பழங்களை விவசாயிகள் பறித்து வருகின்றனர். மேலும் மரத்தின் அடியில் துணியை விரித்து அவற்றை சேகரிக்கின்றனர். பின்னர் அவற்றை தரம்பிரித்து ரெயில்வே கேட் பகுதி மற்றும் சாலையோரங்களில் வைத்து நேரடியாக விற்று வருகின்றனர். அதன்படி ஒரு படி இலந்தை பழம் ரூ.20 வரை விற்பனையாகிறது. இலந்தை பழம் சீசன் காலங்களில் மட்டுமே கிடைக்கும் என்பதாலும், மருத்துவ குணம் அதிகம் கொண்டதாலும் அவற்றை பழனிக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுகின்றனர்.





Next Story