உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் தொழில் தொடங்க மானியம் - கலெக்டர் தகவல்


உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் தொழில் தொடங்க மானியம் - கலெக்டர் தகவல்
x

உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் தொழில் தொடங்க மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம்

பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் 2021/2022-ம் ஆண்டு முதல் 2024/2025-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தில் ஒரு மாவட்டத்துக்கு ஒரு விளைபொருள் என்ற முறையில் செயல்படுத்தப்படுகிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சமையல் எண்ணெய் உற்பத்தி, மரச்செக்கு எண்ணைய் உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கும், உணவு பதப்படுத்தும் மற்றும் வேளாண் சார்ந்த மதிப்பு கூட்டு தொழில் தொடங்க விருப்பம் உள்ள தனி நபர், மகளிர் சுய உதவி குழுக்கள். உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் ஆகியோருக்கும், ஏற்கனவே தொழிலில் ஈடுபட்டுள்ள குறு நிறுவனங்களை விரிவாக்கம் செய்தல், புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்பப் பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கு தகுதியான திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் தொழில் முதலீடு மற்றும் 90 சதவீதம் கடன் பெற்று அவற்றில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் விண்ணப்பங்கள் பெறவும், திட்ட அறிக்கை தயாரிக்கவும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் வள நபர்கள் (ரிசோர்ஸ் பர்சன்ஸ்) பணிபுரிந்து வருகின்றனர்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் https://pmfme.mofpi.gov.in/pmfme என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். அல்லது உரிய ஆவணங்களுடன் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், காஞ்சீபுரம் (044-27238837, 27236686, 27238551) அலுவலகத்தை நேரிலோ அல்லது காஞ்சீபுரம் மாவட்ட வள நபர்களின் செல்போன் எண்களை (9710707526, 7092953437, 7339478549,8428984803) தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story