மறைந்த முன்னாள் தலைமை செயலாளர் சபாநாயகம் உடலுக்கு அரசு மரியாதை


மறைந்த முன்னாள் தலைமை செயலாளர் சபாநாயகம் உடலுக்கு அரசு மரியாதை
x

முதல் அமைச்சரின் உத்தரவின் பேரில் சபாநாயகம் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செய்யப்பட்டது.

சென்னை,

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர் சபாநாயகம். சென்னை ஆர்.ஏ.புரம் பிஷப் கார்டனில் வசித்து வந்த அவர், நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 101.

மறைந்த சபாநாயகம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக 1945-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர். தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றிய அவர் 31.8.1980 அன்று ஓய்வு பெற்றார். பொள்ளாச்சி சப்-கலெக்டராக சபாநாயகம் தனது பணியைத் தொடங்கினார். முதல்-அமைச்சராக இருந்த ராஜாஜியின் தனிச் செயலாளர், சேலம் மாவட்ட கலெக்டர் உள்பட பல முக்கிய அரசுப் பணிகளை அவர் மேற்கொண்டுள்ளார். மத்திய அரசின் கல்வி மற்றும் கலாசார அமைச்சக செயலாளர் உள்ளிட்ட பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.

அவரது மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். நூற்றாண்டுகளையும் கடந்து வாழ்வாங்கு வாழ்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய முன்னாள் தலைமை செயலாளர் சபாநாயகத்தை கவுரவிக்கும் விதமாக அன்னாருக்கு போலீஸ் மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து முதல் அமைச்சரின் உத்தரவின் பேரில் சபாநாயகம் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செய்யப்பட்டது. காவல்துறை மரியாதைக்கு பிறகு, பெசன்ட்நகர் மின்மயானத்தில் சபாநாயகம் உடல் தகனம் செய்யப்பட்டது.


Next Story