கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை..!


கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை..!
x

கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

சென்னை அடையாறில் உள்ள கலாஷேத்ரா நடனக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரை அடையாறு மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தற்போது இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. பின்னர், மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வு பிரிவு ஐ.ஜி., பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி 6 வாரத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு விவகாரம் தொடர்பாக கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் இன்று நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 2 டிஎஸ்பிக்கள், பெண் காவல் ஆய்வாளர் உட்பட 4 அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுவதால் விசாரணையை 13-ம் தேதி வைத்துக் கொள்ளலாம் என கலாஷேத்ரா நிர்வாகம் வேண்டுகோள் வைத்த நிலையில், தேர்வுகள் முடிந்த பின் விசாரணை நடத்தலாம் என்பது இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் என அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.


Next Story