குதிரை வீரன், போர் வீரன் சிற்பம் கண்டுபிடிப்பு


குதிரை வீரன், போர் வீரன் சிற்பம் கண்டுபிடிப்பு
x

மதுரை மாவட்டம் பேரையூரில் 600 ஆண்டுகள் பழமையான குதிரை வீரன்,போர் வீரன் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மதுரை

பேரையூர்,

மதுரை மாவட்டம் பேரையூரில் பழமையான குதிரை வீரன்,போர் வீரன் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கள ஆய்வு

மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் வரலாற்றுத்துறை உதவி பேராசிரியரும் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் முனீஸ்வரன், முனைவர் லட்சுமண மூர்த்தி, ஆதி பெருமாள்சாமி, ஆகியோர் பேரையூர் பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தனியார் விவசாய நிலத்தில் தனிப்பலகைக் கல்லில் கி.பி.15-ம் நூற்றாண்டை சேர்ந்த குதிரை வீரன் மற்றும் போர் வீரன் நடுகற்கள் கண்டறியப்பட்டன.

இதுகுறித்து உதவிப் பேராசிரியர் முனீஸ்வரன் கூறியதாவது:- பாண்டிய நாட்டிற்கும், சேர நாட்டிற்கும் வணிக பாதை செல்லும் முக்கியமான ஊர் பேரையூர். இந்த ஊர் ஆரம்பத்தில் கடுங்கோமங்கலம் என்ற பெயரில் அழைக்கப் பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த ஊரில் ஆதிகால மனிதனின் வாழ்விடம், பாறை ஓவியம், முதுமக்கள் தாழி, பாண்டியர் கால கல்வெட்டு மற்றும் நாயக்கர் கால நடுகற்கள் காணப்படுகின்றன.

குதிரை வீரன் சிற்பம்

பேரையூர் மொட்டமலை அருகே தனியார் விவசாய நிலத்தில் தனிப்பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டு உள்ளது. குதிரை வீரன் நடுகல் 6 அடி உயரம், 3 அடி அகலமும் கொண்டுள்ளது. நடுகல்லில் வீரன் குதிரை மேல் அமர்ந்திருப்பது போன்ற புடைப்பு சிற்பம் செதுக்கப் பட்டு உள்ளது.

பாய்ந்து செல்கின்ற குதிரையும், அதில் அமர்ந்து ஈட்டியை ஓங்கி பிடித்துள்ள வீரனும், நம்முடைய கண்ணையும், கருத்தையும் கவர்கின்றனர். வீரனின் இறுகிய காலும், ஒட்டிய வயிறும், விரிந்த மார்பும், காலில் அணிந்துள்ள கழலும், வீரன் இடுப்பில் உள்ள குறுவாளும் அவன் ஒரு வீரன் என்பதை பறை சாற்றுகின்றன.

வளர்ந்த காதுகளும், சிறிய கொண்டையும் அன்றைய நாகரிகத்தை சொல்கின்றன. வீரனின் கண்களில் தெரியும் உறுதியும் அதற்கு இணையாக குதிரையின் கண்களில் தெரியும் உறுதியும், எதிரிகளை மிரட்டுகின்றன. குதிரையின் மேலே விரிக்கப்பட்டுள்ள சேனத்தின் எளிமையான அலங்காரம் நம்மை வசீகரிக்கின்றன. குதிரையின் புடைத்த காதும் மேலே தூங்கிய வாலும் குதிரை செல்லும் வேகத்தை நமக்கு உணர்த்துகின்றன. குதிரை வீரனுக்கு பின்னர் 3 பெண்கள் வரிசையாக நிற்கின்றனர். மனைவி மட்டும் பாதம் வரை ஆடை அணிந்திருப்பதும், பணிப்பெண்கள் கால் முட்டி வரை மட்டுமே ஆடை அனிந்திருப்பதும் கவனிக்கத்தக்கவை. ஆனால் மூன்று பேருமே மார்பில் கச்சு அணிந்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போர் வீரன் சிற்பம்

குதிரை வீரன் சிற்பம் அருகில் உள்ள போர் வீரனின் புடைப்பு சிற்பம் 3 அடி உயரம் 2 அடி அகலமும் கொண்டு உள்ளது. வீரன் இடுப்பில் குறுவாளுடனும், வலது கையில் உயர்த்திய வாளுடன், நீண்ட காதுகள், சற்று சரிந்த கொண்டையுடன் நின்றவாறு காட்சி தருகிறான்.

இந்தபகுதியில் நடந்த போரில் உயிர்நீத்த குதிரை வீரன் மற்றும் போர் வீரர்களின் நினைவை போற்றும் வகையில் இந்த நடுகற்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நடுகற்கள் ஹொய்சாளர் கலைப்பாணியில் அமைந்து உள்ளதால் கி.பி.15-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story