கோவையின் பெருமைகளை விளக்கும் வகையில் மாநகரின் 21 இடங்களில் சிலைகள்

கோவையின் பெருமைகளை விளக்கும் வகையில் மாநகரின் 21 இடங்களில் பல்வேறு விதமான சிலைகள் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கோவை
கோவையின் பெருமைகளை விளக்கும் வகையில் மாநகரின் 21 இடங்களில் பல்வேறு விதமான சிலைகள் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அழகுப்படுத்தப்படும் கோவை மாநகரம்
சென்னைக்கு அடுத்தப்படியாக 2-வது முக்கிய நகரமாக கோவை விளங்குகிறது. கோவை மாநகராட்சியில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கோவையில் தொழில் துறை மட்டுமின்றி, ஏராளமான கல்லூரிகள், அதிநவீன வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.
இதனால் பிற மாநிலங்கள், பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கோவைக்கு அதிகமாக வருகின்றனர். இந்த நிலையில் கோவைக்கு வரும் மக்களை கவரும் வகையில் மாநகரம் அழகுப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை மாநகரில் 21 இடங்களில் கோவையின் பாரம்பரியத்தை விவரிக்கும் வகையில் சிலைகள் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ரேக்ளா பந்தயம்
இதன்படி முதற்கட்டமாக கோவை சுங்கம் ரவுண்டானாவில் ரேக்ளா பந்தயம் குறித்த சிலை வைக்கப்பட்டு உள்ளது. இதில் ரேக்ளா வண்டியில் பூட்டப்பட்ட 2 காளைகள் சீறிக்கொண்டு ஓடுவது போலவும், வண்டியில் இருவர் அமர்ந்து கொண்டு காளைகளை விரட்டுவது போலவும் தத்ரூபமாக சிலை வடிக்கப்பட்டு உள்ளது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை மாநகரில் உள்ள மாநகராட்சி, அரசு கட்டிடங்களின் சுவர்களில் தமிழர் பண்பாட்டை விளக்கும் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும் கோவை குறிச்சி குளத்தில் ஜல்லிக்கட்டு காளை, சிலம்பம் ஆடும் வீரர்கள், வள்ளுவர் உள்ளிட்டோரின் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளது.
கோவையின் பெருமை
இதன்தொடர்ச்சியாக கோவையின் பெருமைகளை விளக்கும் விதமாக கோவை மாநகரில் ரேஸ்கோர்ஸ், சுங்கம் ரவுண்டானா, காந்திபுரம் மேம்பாலம் உள்பட 21 இடங்களில் சிலைகள் வைக்க முடிவு செய்யப்பட்டது.
தற்போது ரேக்ளா பந்தய காளைகள் சிலை சுங்கம் பகுதியில் வைக்கப்பட்டு உள்ளது. அந்த சிலையை சுற்றிலும் அழகிய புல்வெளிகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் உள்ளே நுழையமுடியாதபடி வேலிகள் அமைக்கப்படும்.
இதையடுத்து ரேஸ்கோர்ஸ், புரூக்பாண்ட் ரோடு ரவுண்டானா ஆகிய இடங்களில் சிலைகள் வைக்கப்பட உள்ளது. இந்த சிலைகள் கோவை மக்களை மட்டுமின்றி இங்கு வரும் பிற மாவட்ட, பிற மாநில மக்களையும் கவரும் வகையில் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.






