விடுதிகளில் தங்கி படிக்க பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


விடுதிகளில் தங்கி படிக்க பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 6 Jun 2023 6:45 PM GMT (Updated: 7 Jun 2023 1:04 AM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் தங்கி படிக்க பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி.பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பள்ளி- கல்லூரி விடுதிகள்

தமிழ்நாடு அரசால் விழுப்புரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோர் மாணவ-மாணவிகளுக்கென மொத்தம் 35 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி மாணவர்களுக்கென 24 விடுதிகளும் மாணவிகளுக்கென 5 விடுதிகளும், கல்லூரி மாணவர்களுக்கென 3 விடுதிகளும், மாணவிகளுக்கென 3 விடுதிகளும் உள்ளன.

பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ- மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பாலிடெக்னிக் படிப்புகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் சேர தகுதியுடையவர்கள் ஆவர். அனைத்து விடுதி மாணவ- மாணவிகளுக்கு உணவு, தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 4 இணை சீருடைகள் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கலாம்

மேலும் விடுதிகளில் சேருவதற்கான தகுதிகளாக பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ- மாணவிகளின் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.6.2023-க்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.7.2023-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே மாணவ- மாணவிகள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story