போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்


போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 26 Jun 2023 7:09 PM GMT (Updated: 26 Jun 2023 7:12 PM GMT)

போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தனியார் நிறுவனம் மூலம் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தில் ஆட்களை நியமிப்பதற்கு எதிர்ப்பு எழுந்து அதற்கான முயற்சிகள் கைவிடப்பட்ட நிலையில், அதற்கு மாறாக போக்குவரத்துக்கழகத்தில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணிக்கு அமர்த்த இப்போது முயற்சி மேற்கொள்வதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

வயது முதிர்வு காரணமாக ஒய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்த நினைப்பது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாகும் என்பது திமுக அரசுக்கு தெரியாதா? காலிப்பணியிடங்களில் நிரந்தரமாக ஆட்களை நியமிக்க நடவடிக்கை எடுக்காமல் மாற்று காரணங்களை முன்னிறுத்தி தொடர்ந்து காலதாமதம் செய்வதன் பின்னணியிலும் உள்ள மர்மம் என்ன?

ஓட்டுநர், நடத்துநர் பயிற்சி முடித்த எண்ணற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் நிலையில், திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்பும் வாக்குறுதி படி அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல் அவர்களை அலைக்கழிப்பது ஏன்?

தமிழக அரசு இனியும் மெத்தனம் காட்டாமல் போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.



Next Story