தன்னார்வலர்களை கொண்டு சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு


தன்னார்வலர்களை கொண்டு சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு
x

தன்னார்வலர்களை கொண்டு சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

மதுரை,

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கிராமத்தில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். ஆலங்குளம் கிராமத்திற்கு அருகே தொட்டியன்குளம் கண்மாய் அமைந்துள்ளது. இது சுமார் 88 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தில் இருக்கும் நீரினை நம்பியே சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய கிராமம் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பொதுப்பணித்துறையினர் குளத்தை சரியாக தூர்வாராத காரணத்தினால் அங்கு சீமை கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ளன. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் இல்லாமல் நிலங்கள் வறண்டு காணப்படுகிறது. தொட்டியம்குளம் கண்மாயில் தற்போது கழிவுநீர் உள்பட கழிவுப் பொருட்களும் தேங்கி உள்ளது.

எனவே தென்காசி, ஆலங்குளம் கிராமத்தில் உள்ள தொட்டியங்குளம் கண்மாயை முறையாக தூர்வாரி சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், தென்காசி மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக டெண்டர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் மூலம் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கலாமே எனவும், தென்காசி, ஆலங்குளம், தொட்டியங்குளம் கண்மாயில் உள்ள சீமை கருவேல மரங்களை மட்டுமின்றி தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள சீமைகருவேலம் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கலாமே என கருத்து தெரிவித்தனர்.

மேலும், சீமை கருவேல மரங்கள் அகற்றுவதற்கான டெண்டர் நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணிதுறைச் செயலாளர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story