குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். துணை தலைவர் லதா கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தீர்மானங்களை கணக்கர் தாமோதரன் வாசித்தார். தீர்மானங்களில், ஒன்றிய செலவினங்கள் மற்றும் 2022-23-ம் ஆண்டு 15-வது நிதிக்குழு மானியம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் பணிகளை முழுமையாக மேற்கொள்ள, பணிகளை தேர்வு செய்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், மக்கள் தொகை அதிகமுள்ள ஊராட்சிகளுக்கு நிதியை அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும். கோடை காலம் வருவதால் ஒன்றிய பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உட்கோட்டை ஊராட்சியில் பாதை, மின்விளக்குகள் அமைக்க வேண்டும். தெற்கு ஆயுதகளத்தில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும். கச்சிப்பெருமாள் ஊராட்சியில் 2 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள், சூரியமணல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மழையின்போது மேற்கூரையில் இருந்து, அதிக அளவு தண்ணீர் உள்ளே வருகிறது. சூரியமணல் வடக்கு கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் தண்ணீர் வழிந்து கொண்டு உள்ளது. அவற்றை சீரமைக்க வேண்டும். வானதிரையன்பட்டினம் கீழத்தெரு, தெற்குத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் குழாய் உள்ளேயே உடைந்து உள்ளது. மோட்டார் இயங்கவில்லை. அவற்றை சீரமைக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதில் அளித்து ஒன்றிய குழு தலைவர் பேசுகையில், கவுன்சிலர்கள் கூறிய கோரிக்கைகளை விரைந்து நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு பகுதியிலும் குடிநீர் பிரச்சினைகள் இருக்கும் பகுதியில், ஜல் ஜீவன் திட்டத்தில் பணிகளை தேர்வு செய்து கவுன்சிலர்கள் கொடுக்க வேண்டும், என்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story