சீன லைட்டரை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் தா.மோ.அன்பரசன்


சீன லைட்டரை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் தா.மோ.அன்பரசன்
x

சீன பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தீப்பெட்டி தொழிலை பெரிதும் பாதித்துள்ள சீன பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜு சட்டசபையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு சிறு, குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதிலளித்து பேசியதாவது:-

தமிழகத்தில் 400 தீப்பெட்டி தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. வருடம் ஒன்றிற்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு விற்பனையாகிறது. விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் 5 லட்சம் தொழிலாளர்கள் இந்த தொழிலில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டு வருகின்றனர்.

பிளாஸ்டிக் லைட்டரால் தீப்பெட்டி தொழில் பாதித்துள்ளது. குறைந்த விலையில் 20 தீப்பெட்டி உடைய அளவில் இந்த லைட்டர் வந்துள்ளதால் மொத்தமாக 20 சதவீதம் அளவிற்கு ஆக்கிரமித்துள்ளது. இது குறித்து கடந்த செப்டம்பர் மாதத்தில் முதல்-அமைச்சர் மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதன் தொடர்ச்சியாக சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயலாளரும் மத்திய அரசிற்கு கடிதம் எழுதினார்.

தற்பொழுது குஜராத் நீதி மன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பு அடிப்படையில் கூடுதல் உத்தரவுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. தீப்பெட்டி தொழிலை பெரிதும் பாதித்துள்ள சீன பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்வதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story