ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற தொழிலாளியால் பரபரப்பு


ஜெயங்கொண்டம் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்ற தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர்

நீர்நிலை ஆக்கிரமிப்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கடாரங்கொண்டான் கிராமத்தில் அன்னகெளந்தன் பெரியஏரி உள்ளது. இதன் அருகே 10 குடும்பத்தினர் 2 தலைமுறையாக வசித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் 3 குடும்பத்தினர் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டனர். இதில் சிலர் அகற்றாமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தற்கொலைக்கு முயற்சி

அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சண்முகம் (வயது 53) என்பவரது கூரை வீட்டை அகற்றிய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சண்முகம் திடீரென தன் கையில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் அவரிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைதொடர்ந்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன் மற்றும் கருணாநிதி ஆகியோர் போலீசார் உதவியுடன் பொக்லைன் எந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும் அங்கு குடியிருந்தவர்களில் சிலர் மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


Next Story