புயல் எச்சரிக்கை : மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க சுகாதாரத்துறை உத்தரவு


புயல் எச்சரிக்கை : மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க சுகாதாரத்துறை உத்தரவு
x

தேவையான மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும்.

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்த புயலுக்கு 'மிக்ஜம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வரும் 4-ம் தேதி வட தமிழக கடலோர பகுதிக்கு நகர்ந்து 5-ம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் நாளை மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புயல் எச்சரிக்கை காரணமாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் தேவையான மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். நிவாரண மையங்களில் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். தேவையான அளவு கிருமி நாசினி தயார் நிலையில் இருக்க வேண்டும். நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.


Next Story