குழந்தை திருமணம் செய்து வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை


குழந்தை திருமணம் செய்து வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை
x

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்து வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுப்பு தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதல் இதுவரை 17 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் குழந்தை திருமண தடுப்பு பிரசாரம், குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு, துண்டு பிரசுரங்கள் வழங்குதல், குழந்தை திருமணத்தால் ஏற்படும் தீமைகள், அதற்கான தண்டனைகள் குறித்தும், குழந்தை திருமணம் குறித்து தகவல் அளிப்பது குறித்தும் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கிராம சபை கூட்டங்கள் மூலமாக குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் மாவட்டத்தில் பல இடங்களில் நடக்க இருந்த குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, அக்குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் குழந்தை திருமணம் செய்வது சட்டத்திற்கு புறம்பானதாகும். குழந்தை திருமணம் செய்து வைப்பவர்கள் மட்டுமல்லாமல், திருமணத்தில் பங்கேற்பவர்கள் மீதும் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் எந்த பகுதியில் குழந்தை திருமணம் நடைபெற்றாலும், அது குறித்த தகவலை 1098 என்ற உதவி எண்ணிலோ அல்லது 181 என்ற மகளிர் உதவி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மேற்கண்ட தகவல் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு்ள்ளது.


Next Story