விதிகளை பின்பற்றாத உர விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை


விதிகளை பின்பற்றாத உர விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 16 Oct 2023 6:45 PM GMT (Updated: 16 Oct 2023 6:47 PM GMT)

விதிகளை பின்பற்றாத உர விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிவகங்கை

உரம் இருப்பு

சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவைப்படும் யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உரங்கள் போதிய அளவு இருப்பில் உள்ளது. யூரியா 2855.டன், டி.ஏ.பி. 1750.டன், பொட்டாஷ் 542.டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 2538.டன் ஆகியன சிவகங்கை மாவட்ட அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு உள்ளது. மேலும் விவசாயிகளுக்கு தேவைப்படும் நுண்ணூட்ட உரங்கள் நெல் 61910 கிலோ, பயறு 3388 கிலோ, தென்னை 26833 கிலோ, கடலை 3947 கிலோ ஆகியனவும் இருப்பில் உள்ளன.

விவசாயிகள் உரம் வாங்கும்போது அவசியம் தங்களின் ஆதார் அட்டை எடுத்து சென்று அரசு வழங்கும் மானிய விலையில் உரங்களை வாங்கி பயன்பெற வேண்டும். மேலும் உரம் மற்றும் பூச்சி மருந்துகள் வாங்கும் போது அவசியம் பில் கேட்டு வாங்க வேண்டும்.

கடும் நடவடிக்கை

மேலும் சிவகங்கையிலுள்ள தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உரங்களின் விலைப்பட்டியல், உரம் இருப்பு விவர பலகைகளை விவசாயிகளுக்கு தெரியுமாறு வைக்க வேண்டும்

அத்துடன். உரங்களை அரசு நிர்ணயம் செய்துள்ள மானிய விலையில் மட்டுமே விற்பனை செய்யவேண்டும். உரவிற்பனையில் தவறுகள் நடப்பதை தடுக்க வட்டார அளவில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. விதிகளை பின்பற்றாத உர விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் விவசாயிகள் யூரியா உரத்தினை அதிக அளவு பயன்படுத்தாமல், சமச்சீர் விகிதத்தில் காம்ப்ளக்ஸ், டி.ஏ.பி. உரங்களை பயன்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story