தூத்துக்குடி மாவட்டத்தில்புகையிலை தடை சட்ட விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை:கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை


தூத்துக்குடி மாவட்டத்தில்புகையிலை தடை சட்ட விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை:கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 Sep 2023 6:45 PM GMT (Updated: 1 Sep 2023 6:45 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில்புகையிலை தடை சட்ட விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் புகையிலை தடை சட்ட விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், டீக்கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

கண்காணிப்பு குழு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் புகையிலை தடை சட்டம் அமலாக்க பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது, தேசிய புகையிலை தடுப்பு சட்ட அமலாக்கப் பணிகளை மாவட்ட அளவில் அமல்படுத்த துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேசிய புகையிலை தடை சட்டம் 2003-ன் படி, மருத்துவமனைகள், உணவு விடுதிகள், கல்வி நிலையங்கள், பொது நூலகங்கள், பஸ் நிலையங்கள், தபால் அலுவலகங்கள், ரெயில் நிலையம், சினிமா தியேட்டர்கள், பணிபுரியும் இடங்கள், டீக்கடைகள் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் அலுவலக பொது இடங்களில் புகைபிடிக்க தடைசெய்யப்பட்டு உள்ளது. மேலும், 18 வயதுக்கு உட்பட்ட நபர்களிடம் புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. டீக்கடைகளில் புகையிலைப் பொருட்களை விற்க தடை செய்யப்பட்டது.

நடவடிக்கை

"புகை பிடிக்க தடைசெய்யப்பட்ட பகுதி" மற்றும் 18 வயதுக்கு உட்பட் நபர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்வது இல்லை" ஆகிய பதாகைகளை சுகாதாரத் துறை அலுவலர்களின் வழிகாட்டுதலின்படி காட்சிப்படுத்துதல் வேண்டும். புகையிலைப் பொருட்கள் குறித்து விளம்பரப் பலகை மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்க தடை செய்யப்பட்டு உள்ளது. கல்வி நிலையங்களை சுற்றி 100 மீட்டர் தொலைவில் உள்ள கடைகளில் யாரும் புகையிலை மற்றும் புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. புகையிலை தடை சட்ட விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட அளவில், வட்டார அளவில் குழு அமைக்கப்பட்டு குழு உறுப்பினர்களால் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கல்வி நிறுவனங்களில்...

கல்விநிறுவனங்கள் புகையிலை தடை சட்டவிதிகளை அமல்படுத்தி புகையிலை இல்லா கல்வி நிறுவனம் என்ற சான்றிதழ் பெற பொது சுகாதாரத் துறை துணை இயக்குநருக்கு விண்ணப்பித்து, சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். கூட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story