விளைநிலங்களில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை


விளைநிலங்களில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 26 March 2023 6:45 PM GMT (Updated: 26 March 2023 6:45 PM GMT)

விளைநிலங்களில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளுக்கு கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காப்பு காடுகள், காப்பு நிலங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி மற்றும் கம்பி வேலிகள் அமைப்பதால் வன விலங்குகள் மற்றும் மனித உயிரிழப்பு ஏற்படுகிறது. விவசாயிகள் தங்களின் நிலங்களில் சாகுபடி செய்துள்ள பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தடுப்பதற்காக சமீப காலமாக மின்வேலி அமைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

பொதுமக்கள் மற்றும் விலங்குகளின் உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படுகிறது. பல இடங்களில் மின்வேலியில் சிக்கி யானைகளும் உயிரிழந்து வருகிறது.

மின்வேலி அமைத்தல் என்பது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படியும், தமிழ்நாடு மின்சார சட்டத்தின்படியும் மிக கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் மின்வேலி அமைக்கக்கூடாது.

குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்

இந்த எச்சரிக்கையை மீறி மின்வேலி அமைத்தால் அதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் சம்பந்தப்பட்ட நபரே பொறுப்பேற்க நேரிடும். மின்வாரியம் மற்றும் வன அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது சட்டத்தை மீறி மின்வேலி அமைத்திருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி கடுமையான குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். எனவே விவசாயிகள் மின்வேலி அமைப்பதை தவிர்த்து மற்ற உயிர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு தகுந்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story