ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த பணியாளர்கள் 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்


ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த பணியாளர்கள் 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
x

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த பணியாளர்கள் 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த பணியாளர்கள் 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் அரசு அறிவித்த ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 29-ந் தேதி முதல் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்கள் ஆஸ்பத்திரியின் வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இரவில் கொட்டும் பனியிலும் ஒப்பந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 3-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

கோரிக்கைகள்

இந்த போராட்டத்தில், மாவட்ட நிர்வாகம் அறிவித்த ஊதியமான நாள் ஒன்றுக்கு ரூ.707 வீதம் மாதந்தோறும் ரூ.21 ஆயிரத்து 260 வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு ஆஸ்பத்திரியில் உடை மாற்ற, ஓய்வெடுக்க அறை ஒதுக்க வேண்டும். ஒப்பந்த முறைப்படி 3 சிப்ட் அடிப்படையில் பணி வழங்க வேண்டும். வேலை நேர பணி அட்டை வழங்க வேண்டும்.

வார விடுமுறையை சுழற்சி அடிப்படையில் வழங்க வேண்டும். இலவச சீருடை, பாதுகாப்பு உடைகள் வழங்க வேண்டும். தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் பணியாற்றுபவர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. 3 நாட்களாக போராட்டம் நீடிப்பதால் அரசு ஆஸ்பத்திரியில் சுகாதார பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. எனவே ஒப்பந்த பணியாளர்களின் போராட்டத்தை வாபஸ் பெறும் வகையில் அதிகாரிகள் உரிய பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story