கைகளில் மண் சட்டி ஏந்தி போராட்டம்


கைகளில் மண் சட்டி ஏந்தி போராட்டம்
x

பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கைகளில் மண் சட்டி ஏந்தி விவசாய சங்கத்தினர் போராட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

பூதலூர் ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் (100 நாள் வேலை) பணி செய்தவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கக்கோரியும், தொடர்ச்சியாக வேலை வழங்க கோரியும் பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கம் ஆகியவை இணைந்து நூதன போராட்டத்தை நடத்தின. இதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டும், கைகளில் மண்சட்டியை ஏந்தி கொண்டும், பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் கண்ணன், மாதர் சங்க மாநில குழு உறுப்பினர் கலைச்செல்வி மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். தகவல் அறிந்த பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஒரு வாரத்திற்குள் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story