கணினி அறிவியல் பாடப்பிரிவை சேர்க்க கோரி பாண்டமங்கலம் அரசு பள்ளியில் மாணவர்கள் முற்றுகை போராட்டம்


கணினி அறிவியல் பாடப்பிரிவை சேர்க்க கோரி   பாண்டமங்கலம் அரசு பள்ளியில் மாணவர்கள் முற்றுகை போராட்டம்
x

கணினி அறிவியல் பாடப்பிரிவை சேர்க்க கோரி பாண்டமங்கலம் அரசு பள்ளியில் மாணவர்கள் முற்றுகை போராட்டம்

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அடுத்த பாண்டமங்கலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடம் உள்ளது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 79 மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர். இங்கு கணிதம், கலை, வேளாண்மை உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. ஆனால் கணினி அறிவியல் பாடப்பிரிவு இல்லை என தெரிகிறது.

இந்த நிலையில் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்களில் 15-க்கும் மேற்பட்டோர் பிளஸ்-1 வகுப்பில் கணினி அறிவியல் பாடப்பிரிவு கேட்டுள்ளனர். ஆனால் பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல் கணினி அறிவியல் பாடப்பிரிவு இல்லை என்றும், வேறு பாடப்பிரிவில் சேர்ந்து கொள்ளுமாறும் கூறினார். இல்லையென்றால் அருகே உள்ள பள்ளிக்கூடத்துக்கு சென்று சேர்ந்து கொள்ளும்படி கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த மாணவர்கள் பள்ளியில் கணினி அறிவியல் பாடப்பிரிவை ஏற்படுத்தி தர கோரி நேற்று காலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் தங்கவேலிடம் கேட்டபோது, பாடப்பிரிவுகளில் முழுமையாக சேர்க்கை நடைபெறாததால் புதிதாக ஒரு பாடப்பிரிவை ஏற்படுத்தமுடியாது என தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் பெற்றோர்களுடன் இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளியின் முன்பு சாலை மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.


Next Story