திட்டக்குடி அருகே கொடூர சம்பவம்: பள்ளி மாணவியை வீட்டுக்குள் பூட்டி வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் வீடியோ எடுத்து மிரட்டிய 3 மாணவர்கள் கைது


திட்டக்குடி அருகே கொடூர சம்பவம்:  பள்ளி மாணவியை வீட்டுக்குள் பூட்டி வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்  வீடியோ எடுத்து மிரட்டிய 3 மாணவர்கள் கைது
x

திட்டக்குடி அருகே மாணவியை வீட்டுக்குள் பூட்டி வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்


ராமநத்தம்,


கடலூர் மாவட்டம், திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அதேபகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார்.

அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து பொதுத்தேர்வில் தோல்வியடைந்த கொடிக்களம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவர் கடந்த மே மாதம் 22-ந்தேதி சக மாணவர்களை தனது வீட்டுக்கு அழைத்து வந்து, தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

இதில் திட்டக்குடி பகுதியை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில், கேக் வெட்டிய போது, பிறந்தநாள் கொண்டாடிய மாணவர், மாணவியுடன் சேர்ந்து செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். இதையடுத்து பிறந்தநாள் கொண்டாடிய மாணவர் சென்னைக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

மாணவிக்கு மிரட்டல்

இந்நிலையில், மாணவியின் வகுப்பில் படித்து வரும் ஆவினங்குடியை சேர்ந்த ஒரு மாணவர், அந்த மாணவியிடம் பிறந்தநாள் விழாவில் நீ கொடிக்களத்தை சேர்ந்த மாணவருடன் எடுத்த புகைப்படம் என்னிடம் உள்ளது, உனது வீட்டில் கொடுத்துவிடுவேன் என்று கூறி மிரட்டினார். இதை உன் வீட்டில் தரக்கூடாது என்றால் நான் கூப்பிடும் இடத்துக்கு நீ வர வேண்டும் என்று தெரிவித்தார். அதன்பேரில் கடந்த 1-ந்தேதி, பள்ளி உணவு இடைவேளையின் போது அந்த மாணவி, பள்ளியின் பின்பகுதியில் உள்ள அந்த மாணவரின் வீட்டுக்கு சென்றார்.

வீட்டுக்குள் பூட்டி வைத்து பாலியல் பலாத்காரம்

அப்போது அந்த வீட்டுக்குள் மாணவி சென்றவுடன், மிரட்டல் விடுத்த அந்த மாணவர் உள்பக்கமாக கதவை பூட்டிவிட்டார். வீட்டுக்குள் சிக்கிய அந்த மாணவிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

மேலும், உள்ளே மாணவியுடன் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வரும் மேலும் 2 மாணவர்கள் இருந்தனர். தொடர்ந்து அந்த 3 மாணவர்களும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, அதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதனால் அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடூரத்தை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் தனக்குள்ளேயே அழுது வந்தார்.

இந்த சூழ்நிலையில் அந்த 3 மாணவர்களும் தாங்கள் எடுத்த வீடியோவை சென்னைக்கு வேலைக்காக சென்ற கொடிக்களத்தை சேர்ந்த மாணவருக்கு தெரியும் வகையில் அனுப்ப முடிவு செய்து இருக்கிறார்கள். ஆனால் அவரிடம் சாதாரண வகை செல்போன் இருந்ததால், அவருடன் இருக்கும் ஆவினங்குடி பகுதியை சேர்ந்த மற்றொருவரின் செல்போனுக்கு கொடிக்களம் மாணவருக்கு தெரியும் வகையில் வீடியோவை அனுப்பி வைத்துள்ளனர்.

இதனால் இந்த விவகாரம் மேலும் பூதாகரமானது. இதையடுத்து இந்த வீடியோ விவகாரம் மேலும் ஒரு மாணவருக்கு தெரியவந்தது. அந்த மாணவரும், மாணவியிடம் சென்று தன்னிடம் வீடியோ உள்ளது என்று கூறி மிரட்டல் விடுத்தார்.

4 பேர் கைது

இதையடுத்து தனக்கு நேர்ந்த கொடூரத்தை தனது தாயிடம் கூறி கதறி அழுது, இனி பள்ளிக்கு படிக்க செல்லவில்லை என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த தாய், ஆவினங்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து வந்து விசாரித்தனர்.

மேலும் அவர்களது செல்போனை சோதித்த போது அதில் மாணவியின் புகைப்படம் மற்றும் வீடியோ இருந்தது. இதையடுத்து ஆவினங்குடியை சேர்ந்த 3 மாணவர்கள் மற்றும் இதற்கு தூண்டுதலாக இருந்ததாக கொடிக்களத்தை சேர்ந்த முன்னாள் மாணவர் என 4 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

பள்ளியில் விசாரணை

இதற்கிடைய சம்பவம் பற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பிரச்சினைக்குரிய பள்ளி மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து கைதான 4 பேரும் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவரது தாயுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story