இயற்கை முறையில் ஏ.சி. அமைத்து மாணவர்கள் சாதனை


இயற்கை முறையில் ஏ.சி. அமைத்து மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 19 Nov 2022 6:45 PM GMT (Updated: 19 Nov 2022 6:45 PM GMT)

இயற்கை முறையில் ஏ.சி. அமைத்து மாணவர்கள் சாதனை படைத்தனர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூர் ஸ்ரீராஜ ராஜன் என்ஜினீயரிங் கல்லூரியில் 30 நிமிடத்தில் 50 மாணவர்கள் சேர்ந்து இயற்கையான முறையில் 50 மண்பானைகள் மூலம் அறையில் குளிர் சாதன வசதி செய்து சாதனை புத்தகத்தில் இடம் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு .அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் சுப்பையா தலைமை தாங்கினார். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகையில், மாணவர்கள் கல்வியுடன் சேர்ந்து பிற துறை சார்ந்த திறன்களையும் வளர்த்துக்கொள்ளவேண்டும். புதிய தொழில் நுட்பங்களை மாணவர்கள் கண்டு பிடிக்கவேண்டும் என்றார். ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் வெங்கடேசன் மாணவர்களின் சாதனைகளை பதிவு செய்தார். அதற்க்கான சான்றிதழ்களை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி மாணவர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் ராஜராஜன் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் வாசுகி, ராஜராஜன் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயற்கை முறையில் குளிர் வசதியை பெறும் வழிமுறையினை 50 மாணவர்கள், 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 50 மண்பானைகள், நீர்மூழ்கி மோட்டார், வெட்டி வேர், நீர், மணல் ஆகியவற்றை கொண்டு புதிய தொழில்நுட்பத்தில் 30 நிமிடத்தில் செயல்முறைப்படுத்தி காட்டினர். 3 ஆயிரம் சதுர அடி ஆடிட்டோரியத்தில் 50 பானைகளில் இருந்து வந்த குளிர்காற்று 10 டன் ஏ.சி.மூலம் பெறப்படும் குளிர்காற்று அளவிற்கு ஆடிட்டோரியத்தை குளிரூட்டப்பெற்ற அறையாக மாற்றியதாக தெரிவித்தனர்.


Next Story