பள்ளிக்கூடத்தை மாணவர்கள், பெற்றோர் முற்றுகை


பள்ளிக்கூடத்தை மாணவர்கள், பெற்றோர் முற்றுகை
x
தினத்தந்தி 14 Jun 2023 7:09 PM GMT (Updated: 15 Jun 2023 7:30 AM GMT)

மூலைக்கரைப்பட்டியில் பள்ளிக்கூடத்தை மாணவர்கள், பெற்றோர் முற்றுகையிட்டனர். அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை விடுத்தனர்.

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டியில் பள்ளிக்கூடத்தை மாணவர்கள், பெற்றோர் முற்றுகையிட்டனர். அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை விடுத்தனர்.

முற்றுகை

மூலைக்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 450 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று மீண்டும் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக அழைத்து வந்தனர்.

அப்போது பள்ளிக்கூடத்தில் ஏற்கனவே இருந்த கழிப்பறையை இடித்து விட்டு புதிதாக கட்டும் பணி மந்தகதியில் நடப்பதாகவும், மாணவ-மாணவிகளுக்கு போதிய வகுப்பறை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அவர்களிடம், தலைமை ஆசிரியர் கதீஜா மெஹர்பானு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மகாராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பள்ளிக்கூடத்தில் போதிய அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்றுவதாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.


Next Story