தாமதமாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து மாணவர்கள் போராட்டம்


தாமதமாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2023 6:45 PM GMT (Updated: 20 Jan 2023 6:46 PM GMT)

கொடைக்கானல் வில்பட்டியில் தாமதமாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

அரசு பஸ்கள்

கொடைக்கானல் அருகே வில்பட்டி, அட்டுவம்பட்டி, பள்ளங்கி, வாழைக்காட்டு ஓடை உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் மாணவ-மாணவிகள் கொடைக்கானல் நகரில் உள்ள பல்வேறு பள்ளிக்கூடங்களில் படித்து வருகின்றனர்.

அதில் மாணவர்களின் வசதிக்காக வில்பட்டி கிராமத்தில் இருந்து தினமும் காலை 7.30, 8.20 மணிக்கு 2 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் வில்பட்டிக்கு வரும் அரசு பஸ்கள் கடந்த 10 நாட்களாக சரியான நேரத்துக்கு இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் சிரமப்பட்டு வந்தனர்.

சிறை பிடித்து போராட்டம்

இது குறித்து கொடைக்கானல் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலையில் வில்பட்டி கிராமத்திற்கு வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசு பஸ் உரிய நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அரசு பஸ்சை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story