அரசு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்


அரசு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
x

அரசு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி

37 விடுதிகள்

திருச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர் மற்றும் மாணவிகளுக்கென மொத்தம் 37 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவ, மாணவிகளும், அந்த விடுதிகளில் சேர தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் பின்வரும் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

4 இணைச்சீருடைகள்

அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும். எஸ்.எஸ்.எல்.சி. வரை படிக்கும் மாணவ, மாணவிக்கு 4 இணைச்சீருடைகள் வழங்கப்படும். விடுதிகளில் சேருவதற்கான தகுதிகளாக, பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிக்கு பொருந்தாது.

தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

அரசின் சலுகைகள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 23-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கும்போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கத்தேவையில்லை.

விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும், முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே மாணவ, மாணவிகள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையலாம். இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story