பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி படிக்க மாணவிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி படிக்க மாணவிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x

பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி படிக்க மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவிகளுக்கென 4 பள்ளி விடுதிகள் செயல்படுகின்றன.

கல்லூரியில் படிக்கும் மாணவிகள் அருகில் உள்ள பள்ளி மாணவிகள் விடுதிகளில் தங்கி படிக்க செப்டம்பர் முதல் வாரத்தில் விண்ணப்பம் வழங்கலாம். விடுதிகளில் எந்த வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

அனைத்து விடுதி மாணவிகளுக்கும் உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும். விடுதிகளில் சேருவதற்கான தகுதிகளானது, பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

தகுதியுடைய கல்லூரி மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ கட்டணம் எதுவும் இன்றி பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் காப்பாளினிகளிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலத்தில் வருகிற 10-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவிகள் விண்ணப்பிக்கும் போது ஜாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ் எதுவும் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இந்த சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியாக 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களை எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துகொள்ளவும் அவர்களது படிப்பு முடியும் வரை விடுதிளில் தங்கிப் படிக்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே கல்லூரி மாணவிகள் அரசின் இந்த சலுகைகளை பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story