இடிந்து விழுந்த சுற்றுச்சுவரால் மாணவ-மாணவிகள் அச்சம்


இடிந்து விழுந்த சுற்றுச்சுவரால் மாணவ-மாணவிகள் அச்சம்
x
தினத்தந்தி 23 July 2023 9:00 PM GMT (Updated: 23 July 2023 9:01 PM GMT)

செஞ்சேரிப்புத்தூர் அரசு பள்ளியில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரால் மாணவ-மாணவிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

செஞ்சேரிப்புத்தூர் அரசு பள்ளியில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரால் மாணவ-மாணவிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

அரசு பள்ளி

சுல்தான்பேட்டை அருகே செஞ்சேரிப்புத்தூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு செஞ்சேரிப்புத்தூர், சடையஞ்செட்டிபாளையம், கருப்பட்டிபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 65 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு செஞ்சேரிப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பழுதடைந்த நிலையில் இருந்த ஒரு கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. அப்போது கழிப்பறையையொட்டி உள்ள பள்ளியின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியும் சுமார் 40 அடி தூரத்துக்கு இடிந்து விழுந்துவிட்டது.

அச்சம்

இங்கு மாணவ-மாணவிகள் பயன்படுத்தும் கழிப்பறை அருகே உள்ள சுற்றுச்சுவரின் மற்றொரு பகுதியும் சுமார் 70 அடி தூரத்துக்கு வலுவிழுந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அதனருகில் செல்லவே அவர்கள் அச்சப்படுகிறார்கள். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வந்து பார்வையிட்டு, சுற்றுச்சுவரை புதிதாக கட்ட அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டார். அதன்பிறகு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாதுகாப்பற்ற சூழல்

இதுகுறித்து மாணவ-மாணவிகள் கூறியதாவது:-

சுற்றுச்சவர் இடிந்து விழுந்த பகுதியில் சிமெண்டு சீட் மற்றும் இரும்பு கம்பி வலை மூலம் அடைத்து வைக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் அது போதுமானதாக இல்லாததால், பாதுகாப்பற்ற சூழலில் பள்ளி உள்ளது. மேலும் நாங்கள் பயன்படுத்தும் கழிப்பறை அருகே உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பலத்த மழை பெய்யும்போது இடிந்து விழூந்தால், அப்போது அந்த வழியாக செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

இது தொடர்பாக பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் பயனில்லை. 100 ஆண்டை கடந்த பெருமை கொண்ட எங்கள் பள்ளிக்கு உடனடியாக தரமான சுற்றுசுவர் கட்டி தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story