மாணவர்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்


மாணவர்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்
x

கோடைவெயிலில் மாணவர்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவாரூர்

கொரடாச்சேரி:

கோடைவெயிலில் மாணவர்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோடை வெயில்

திருவாரூர் மாவட்டத்தில் கோடைவெயில் மற்றும் எதிர்வரும் காலங்களில் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விட இருக்கும் நிலையில் பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள், கோடைவெயிலில் தேவையின்றி வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

தற்போது பள்ளிகளில் தேர்வு நடைபெற்று கொண்டிருப்பதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு மிகுந்த பாதுகாப்புடன் அனுப்பும் பொருட்டு, தங்கள் பிள்ளைகள் தேவையில்லாமல் வெளியே விளையாட செல்வதை தடுக்க வேண்டும்.

கட்டணமில்லா தொலைபேசி

மேலும் அவர்கள் பள்ளி முடிந்தவுடன் நீர்நிலைகள் உள்ளிட்ட இடங்களுக்கு விளையாட செல்வதை கண்காணித்து தடுக்க வேண்டும். அவர்களுக்கு ஏதேனும், அசம்பாவிதம் ஏற்பட்டால் தீயணைப்பு துறை மற்றும் காவல் துறைக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையை அழைக்க (இலவச எண்.112) என்ற 24 மணிநேரமும் இயங்கக்கூடிய இலவச எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாள் முழுவதும் இயங்கக்கூடிய 04366 226623 / 1077 கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்களுடன் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. கோடைக்காலங்களில் அதிக வெப்ப சலனத்தினால் திருவாரூர் மாவட்டத்தில் உயிர்சேதங்கள் ஏதுமின்றி இருக்க பொதுமக்கள் உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story