மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்


மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
x

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

கடலூர்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ரூ.2 லட்சம் உதவித்தொகை

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மாணவ- மாணவிகளுக்கு 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவர்கள் ஒருவருக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவம் https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm//scholarship schemes என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்த்து அனைத்து ஆவணங்களுடன் இணைத்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் தவறாது சமர்ப்பிக்க வேண்டும்.

புதுப்பித்தல் விண்ணப்பம்

கல்வி நிறுவனங்கள் மாணவ- மாணவிகளிடமிருந்து பூர்த்தி செய்து பெறப்பட்ட தகுதியான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களில் புதுப்பித்தல் விண்ணப்பங்களை 15.12.2023-க்குள்ளும், புதிய விண்ணப்பங்களை 15.1.2024-க்குள்ளும் ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டிடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை- 5 என்ற முகவரிக்கு பரிந்துரை செய்து அனுப்ப வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை tngovtiitscholarship@gmail.com என்ற இணையதள முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம். எனவே இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story