சப்-இன்ஸ்பெக்டர் பணி தேர்வு: தேனி மாவட்டத்தில் 4,522 பேர் எழுதுகின்றனர்


சப்-இன்ஸ்பெக்டர் பணி தேர்வு:  தேனி மாவட்டத்தில் 4,522 பேர் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 24 Jun 2022 3:03 PM GMT (Updated: 25 Jun 2022 8:22 AM GMT)

தேனி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 4 ஆயிரத்து 522 பேர் எழுதுகின்றனர்

தேனி

தமிழக போலீஸ் துறையில் காலியாக உள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்பும் வகையில், இந்த பணிக்கான எழுத்துத்தேர்வு நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. தேனி மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 4 ஆயிரத்து 522 பேருக்கு இணையதளம் மூலமாக ஹால்டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்காக மாவட்டத்தில் 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி தேனி மேரிமாதா மெட்ரிக் பள்ளி, முத்துத்தேவன்பட்டியில் உள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தலா ஒரு மையமும், தேனி கம்மவார் சங்க கல்லூரி வளாகத்தில் 3 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்வு மையங்களில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

'தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்துக்கு காலை 8.30 மணிக்கு முன்பு வரவேண்டும். இந்த தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கும். 10 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு எழுத வரும்போது ஹால்டிக்கெட், அடையாள அட்டை, நீலம் அல்லது கருப்பு நிற பந்துமுனை பேனா (பால்பாயின்ட் பேனா) ஆகியவற்றை தவிர வேறு எந்த பொருட்களும் கொண்டு வரக்கூடாது' என்றார்.மேலும் பாதுகாப்பு பணியில் 550 போலீசார் ஈடுபடுகின்றனர்.


Next Story