மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் மையம்; விண்ணப்பித்து பயன்பெற காஞ்சீபுரம் கலெக்டர் வேண்டுகோள்


மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் மையம்; விண்ணப்பித்து பயன்பெற காஞ்சீபுரம் கலெக்டர் வேண்டுகோள்
x

மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் மையம் அமைக்க விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

வேளாண் எந்திரங்கள்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் மானியத்தில் அமைக்கும் திட்டத்தை கடந்த 2021-22-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

விவசாயிகள் தங்கள் வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை தங்கள் விளைநிலங்களிலேயே பழுது நீக்கி பராமரிக்கவும், விவசாயிகள் வேளாண் பணிகளை எந்த வித இடர்பாடுமின்றி குறித்த நேரத்தில் செய்திடவும் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இந்த மையங்கள் அமைக்கப்படுகின்றன.

ரூ.8 லட்சம் செலவில்

தொழில் முனைவோர் விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இந்த மையங்கள் மானியத்தில் அமைத்து தரப்படும், இந்த மையங்கள் ரூ.8 லட்சம் செலவில் அமைக்கப்படுகின்றன.

இதில் 50 சதவீதம் மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.4 லட்சம் மானியம் வழங்கப்படும்.

மையங்கள் அமைக்க போதிய இடவசதியும், மும்முனை மின்சார இணைப்பும் கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் அருகாமையில் உள்ள வேளாண் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தை அளிக்கலாம்.

மாவட்ட கலெக்டரின் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு இந்த மையம் மானியத்தில் அமைத்து தரப்படும்.

தொடர்பு கொள்ளலாம்

மையங்கள் அமைக்க தேவையான எந்திரங்கள் ஒப்பந்த புள்ளி அடிப்படையில் கண்காணிப்பு பொறியாளர் முடிவு செய்யப்பட்டு, பயனாளிகள் மொத்த தொகையை செலுத்தி வாங்கி கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு அருகாமையில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர்களை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காஞ்சீபுரம் மாவட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம், பஞ்சுப்பேட்டை, காஞ்சீபுரம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story