மானியத்தில் கிணறுகள் அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசனம் மேற்கொள்ளலாம்- காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்


மானியத்தில் கிணறுகள் அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசனம் மேற்கொள்ளலாம்- காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
x

ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில் மானியத்தில் கிணறுகள் அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசனம் மேற்கொள்ளலாம் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

100 சதவீத மானியத்தில்...

தமிழ்நாட்டில் பாசன நீர் ஆதாரங்களை புதிதாக உருவாக்கி அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் அதிக விளைச்சல் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து 2022-23-ம் ஆண்டில் ரூ.12 கோடி செலவில் மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்துத்தரப்படும் என வேளாண் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

அதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் பாசன நீர் வசதி இல்லாத இடங்களில் 200 சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு நிலத்தடி நீர் பாதுகாப்பான குறுவட்டங்களில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்திட தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.

அரியலுர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, காஞ்சீபுரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தேனி என 8 மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீர் பாதுகாப்பாக உள்ள 249 குறுவட்டங்களில் 200 ஆதி திராவிட பழங்குடியின சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நுண்ணீர் பாசனம்

249 சம்பந்தப்பட்ட பாதுகாப்பான குறுவட்டங்களில் உள்ள பயனாளிகள் அந்தந்த மாவட்டத்தின் வேளாண்மை பொறியியல் துறையின் செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் அலுவலர்களை அணுகலாம்.

இந்த திட்டத்தின் கீழ் இடத்திற்கு ஏற்றவாறு, குழாய் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைத்தல், நீரை இறைப்பதற்கு மின்சார சக்தி மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டுகள் நிறுவுதல், பாசன நீரை வீணாக்காமல் சாகுபடி செய்யப்படும் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசன நீர் குழாய்கள் நிறுவுதல் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அரசு வெளியிட்ட ஆணையின்படி, 90 மீட்டர் ஆழம் உள்ள குழாய் கிணறு அமைப்பதற்கும், 100 மீட்டர் ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அமைப்பதற்கும் அதிகபட்சமாக ரூ.3 லட்சமும், மின்சார சக்தி மூலம் இயங்கக்கூடிய 5 குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் அமைப்பதற்கு ரூ.75 ஆயிரமும், நீர் வினியோக குழாய்கள் அமைப்பதற்கு ரூ.20 ஆயிரமும் உச்சவரம்பு தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், மின்சார சக்தி மூலம் இயங்கக்கூடிய இடங்களுக்கு மின்சார இணைப்புக்கான கட்டமைப்புகள் அமைத்திட ரூ.2½ லட்சமும் நிதி வழங்கப்பட்டுள்ளது.

அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஆழத்திற்கும் அதிகமாக கிணறு அமைக்க வேண்டும் என்றாலோ அல்லது கூடுதல் குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் நிறுவ வேண்டும் என்றாலோ, அதற்கான கூடுதல் செலவை விவசாயிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தொடர்பு கொள்ளலாம்

இந்த திட்டத்திற்காக இதுவரை விவசாயிகளை கண்டறிந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெரிய விவசாயிகளை போல, சிறு மற்றும் குறு ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளும் பயன்பெறும் வகையில் பாசன அமைப்புகளை உருவாக்கி தங்களது நிலத்தில் சாகுபடியை மேற்கொள்ள வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில், தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ள இந்த திட்டத்தை வேளாண் பெருமக்கள் பயன்படுத்திட சம்பந்தப்பட்ட மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம்.

காஞ்சீபுரம் மாவட்ட விவசாயிகள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி செயற்பொறியாளர், 487, அண்ணா சாலை, நந்தனம், சென்னை- 35,

உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம், பஞ்சுப்பேட்டை, காஞ்சீபுரம் - 631502 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story