தோட்டக்கலைத்துறை சார்பில் சீமைக்கருவேல மரங்கள் அகற்ற மானிய உதவி

தோட்டக்கலைத்துறை சார்பில் சீமைக்கருவேல மரங்கள் அகற்ற மானிய உதவி வழங்கப்படுகிறது.
மானாமதுரை
மானாமதுரை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுகன்யா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- மானாமதுரை வட்டார தோட்டக்கலைத்துறையில் தேசிய தோட்டக்கலைத்துறை இயக்கத்தின் கீழ் காய்கறி நாற்றுகள், பழக்கன்றுகள் சாகுபடி செய்யவும், மழைநீர் சேமிக்க பண்ணைக்குட்டை அமைக்கவும் மற்றும் விவசாய உரங்கள், இயற்கை உரங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதிய திட்டமாக விவசாய நிலங்களில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்றி விவசாய நிலமாக மாற்றி மிளகாய் சாகுபடி செய்ய 50 சதவீத மானியமாக ரூ.7 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விவசாயம் செய்ய ஏதுவாக நுண்ணீர் பாசன கருவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது பட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் போட்டோவுடன் கூடிய தகவல்களுடன் மானாமதுரை யூனியன் அலுவலகத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை நேரில் அணுகலாம்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.






