நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க மானியம்


நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க மானியம்
x

நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க மானியம் பெறலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டின் மானியக் கோரிக்கையின் போது நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள் அலகு) 50 சதவீத மானியத்துடன் 3 முதல் 6 வரையிலான நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவிட அறிவிப்பு தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மொத்த செலவில் மாநில அரசால் 50 சதவீத மானியம் வழங்கப்படும். பயனாளிகள் பங்களிப்பாக மீதமுள்ள 50 சதவீத மானியத்தினை வங்கி மூலமாகவோ அல்லது தனது ஆதாரங்கள் மூலமாகவோ அளிக்க வேண்டும். ஒரு பயனாளிக்கு 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் கோழி கொட்டகை அமைக்க மின்இணைப்புடன் கூடிய குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் வைத்திருக்க வேண்டும். அக்கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். இந்தப்பகுதி குடியிருப்பு பகுதியிலிருந்து விலகி இருக்க வேண்டும். மாவட்டத்திற்கு 3 முதல் 6 பயனாளிகள் தேர்வு செய்யப்படும். அதில் 30 சதவீதம் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினராக இருக்க வேண்டும். மேலும், விதவைகள், ஆதரவற்றோர்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். எனவே, இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா, அடங்கல் நகல், 50 சதவீத தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம், வங்கி கடன் ஒப்புதல் விவரம்) 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி, 2022-23-ம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்பதற்கான சான்று ஆகியவற்றுடன் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.


Next Story