ரூ.12 கோடியில் துணை மின் நிலையம்


ரூ.12 கோடியில் துணை மின் நிலையம்
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:45 PM GMT)

குன்னூரில் ரூ.12 கோடி மதிப்பில் துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி உள்பட 13 துணை மின் நிலையங்கள் உள்ளன. இதன்மூலம் மாவட்டம் முழுவதும் இரண்டு லட்சத்து 47 ஆயிரம் மின்சார இணைப்புகள் உள்ளன. இதில் 116 இணைப்புகள் எஸ்டேட் தேயிலை தொழிற்சாலை உள்ளிட்ட பயன்பாட்டுக்கு உள்ளன.

இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் அணைகள் மூலமாக சுமார் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 100 மெகாவாட் மின்சாரம் நீலகிரி மாவட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் மின் துறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குறைந்த மின்னழுத்த பிரச்சினையை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


இதன் ஒரு பகுதியாக குன்னூர் சிம்ஸ் பூங்கா பகுதியில் துணை மின் நிலையம் புதிதாக அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வந்தது. தற்போது இறுதி கட்ட பணிகள் நடந்து வருவதால் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இது குறித்து மின்வாரியத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

குன்னுரை பொருத்தவரை ஜெகதலார் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் கொண்டு வரப்படுகிறது இதனால் அவ்வப்போது குறைந்த மின்னழுத்த பிரச்சினை ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதை சரி செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதற்காக 33 கேவி மதிப்பில் ரூ.12.6 கோடி செலவில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. மற்ற பணிகள் முடிந்து இணைப்பு கொடுக்க வேண்டிய வேலைகள் மட்டும் உள்ளது அதுவும் ஒரு சில நாட்களில் நிறைவு நிறைவு பெற்றுவிடும். அதன் பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்த துணை மின் நிலையம் பயன்பாட்டுக்கு வந்தால் பர்லியாரில் இருந்து குன்னூர் வரை உள்ள 50 ஆயிரம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு குறைந்த மின்னழுத்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story