விக்கிரவாண்டியில் பரபரப்புஓடும் பால் வேனில் திடீர் தீடிரைவர் உயிர் தப்பினார்


விக்கிரவாண்டியில் பரபரப்புஓடும் பால் வேனில் திடீர் தீடிரைவர் உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:47 PM GMT)

விக்கிரவாண்டியில் ஓடும் பால்வேனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

விழுப்புரம்


விக்கிரவாண்டி,

சென்னை போரூரில் உள்ள தனியார் பால் கம்பெனியை சேர்ந்த பால் வேன் நேற்று திருச்சிக்கு பால் ஏற்றிக்கொண்டு சென்றது. வேனை சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த டிரைவர் தமிழரசன் (வயது 27) என்பவர் ஓட்டினார். திருச்சியில் பாலை இறக்கி வைத்துவிட்டு, பின்னர் சென்னை நோக்கி, தமிழரசன் வேனை ஓட்டி வந்தார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சூரியா நகர் அருகே காலை 11.30 மணிக்கு வேன் வந்த போது, திடீரென என்ஜீனில் இருந்து கரும்புகை வெளியேறியது.

இதை பார்த்த தமிழரசன், வேனை சாலையோரமாக நிறுத்தி விட்டு, கீழே இறங்கி பார்த்தார். அப்போது,வேன் திடீரென தீப் பற்றி எரிய தொடங்கியது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த அவர், உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

முழுவதும் எரிந்து சேதம்

அதன்படி, விக்கிரவாண்டி தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் தலைமையில் விரைந்து வந்தனர். அதற்குள் வேன் முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னரே தீ கட்டுக்குள் வந்தது. இருப்பினும் வேன் முழுவதும் எரிந்து சேதமாகி விட்டது. இதற்கிடையே விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து, தமிழரசனிடம் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டு, வேனை நிறுத்தியதால் அவர் காயமின்றி உயிர்தப்பினார்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story