திருவாரூரில், திடீரென பெய்த மழை


திருவாரூரில், திடீரென பெய்த மழை
x
தினத்தந்தி 28 Feb 2023 6:45 PM GMT (Updated: 28 Feb 2023 6:46 PM GMT)

திருவாரூரில், திடீரென பெய்த மழையால் கோடை நெல் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருவாரூர்

திருவாரூரில், திடீரென பெய்த மழையால் கோடை நெல் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மிதமான மழை

திருவாரூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கே தயங்கினர்.

வேறு வழியில்லாத நிலையில் குடையை பிடித்துக்கொண்டும் மேலும் வாகனங்களில் செல்பவர்கள் துணியால் தங்கள் தலையை மூடியபடியும் வெளியில் சென்று வருகின்றனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவிகள் தங்களது துப்பட்டாவால் தலையில் மூடிகொண்டு செல்வதை காணமுடிகிறது. இந்தநிலையில் தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

கோடை நெல் சாகுபடி

அதன்படி திருவாரூரில் அதிகாலையில் மழை பெய்தது. தொடர்ந்து சாரல் தூவிகொண்டிருந்த நிலையில் திடீரென காலை 11 மணியளவில் பெரிய மழையாக பெய்ய ஆரம்பித்தது. திடீரென பெய்த மழையால் சாலையில் சென்றவர்கள் ஆங்காங்ககே ஒதுங்கி கொள்ள நின்று கொண்டனர்.

மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மழையில் நனைந்து கொண்டே சென்றனர். சிலர் முன்னெச்சரிக்கையாக கொண்டு சென்ற குடையில் சென்றனர். தரைக்கடை வியாபாரிகள் தார்ப்பாய் கொண்டு பொருட்களை மூடினர். இந்த மழையால் கோடை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருமக்கோட்டை

திருமக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதன் பிறகு காலை திடீரென சாரல் மழை பெய்தது. இதனால் காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சிரமப்பட்டனர். மேலும் நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் வேதனை அடைந்தனர்.


Next Story