சென்னையில், மல்லிகை பூவின் விலை 'கிடுகிடு' உயர்வு: ஒரு கிலோ ரூ.2,400-க்கு விற்பனை


சென்னையில், மல்லிகை பூவின் விலை கிடுகிடு உயர்வு: ஒரு கிலோ ரூ.2,400-க்கு விற்பனை
x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில், மல்லிகை பூவின் விலை ‘கிடுகிடு'வென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.2,400-க்கு விற்பனை ஆகிறது.

சென்னை,

எத்தனை பூக்கள் இருந்தாலும் மல்லிகை பூவுக்கு இருக்கும் 'மவுசு' எந்த பூவுக்கும் இல்லை எனலாம். மல்லிகை பூவின் வாசனையும், அதன் வசீகரமும் ஆளை மயக்கும் தன்மை கொண்டவை. எந்த விழாவாக இருந்தாலும் அதில் மல்லிகை பூ முக்கிய அங்கம் வகிக்கும். பூக்களின் ராணியாக இருக்கும் மல்லிகை பூவுக்கு, அதிலும் மதுரை மல்லிக்கு தமிழகம் தாண்டி வெளிநாடுகளிலும் மவுசு அதிகம்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மல்லிகை பூ உள்பட அனைத்து பூக்களும் அதிக தேவை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது வரத்து பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும் மல்லிகை வரத்தும் குறைந்திருக்கிறது. இதன் காரணமாக மல்லிகை விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது.

இதுகுறித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் காமராஜர் புஷ்ப வியாபாரிகள் நலச்சங்க தலைவர் எம்.டி.அருள் விசுவாசம் கூறியதாவது:-

'கிடுகிடு' விலை உயர்வு

சென்னையை பொறுத்தவரை திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற இடங்களில் இருந்துதான் அதிகளவில் மல்லிகை விற்பனைக்காக எடுத்து வரப்படுகிறது. மேலும் இவை உடனுக்குடன் சிறு வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பிரித்து தரப்பட்டுவிடுகிறது. இதுதவிர மக்களின் தேவை கருதி மதுரையில் விளையும் மல்லியும் விற்பனைக்காக கொண்டு வருகிறோம்.

தற்போது பனிக் காலம் என்பதால், விளைச்சல் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மார்க்கெட்டுக்கு வரும் வழக்கமான வரத்தும் குறைந்திருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேவை அதிகம் இருக்கும் நிலையில் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மல்லிகை பூவின் விலை 'கிடுகிடு'வென உயர்ந்துள்ளது. இதனால் 2 நாட்களுக்கு முன்பாக ரூ.1,500 வரை விற்பனையான ஒரு கிலோ மல்லிகை பூ, தற்போது ரூ.2,400-க்கு விற்பனை ஆகிறது.

ரூ.3 ஆயிரத்தை எட்ட வாய்ப்பு

மல்லிகை பூ போல, இதர பூக்களின் விலையும் கணிசமாகவே உயர்ந்திருக்கிறது. அந்தவகையில் சாமந்தி விலை ரூ.40 வரையிலும், சம்பங்கி விலை ரூ.60-ம், ஜாதி மல்லி ரூ.500-ம், அரளி விலை ரூ.200-ம் உயர்ந்துள்ளது. 'காக்கடா' எனும் வாசமில்லா காட்டுமல்லி விலை 2 மடங்கு விலை உயர்ந்திருக்கிறது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் மல்லிகை உள்பட அனைத்து பூக்களின் விலை இன்னும் உயரக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மல்லிகை பூவின் விலை ரூ.3 ஆயிரத்தை எட்டவும் வாய்ப்பு உள்ளது. தற்போது மார்க்கெட்டில் வியாபாரம் ஓரளவு நடந்து வருகிறது. வரும் நாட்களில் வியாபாரம் இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விலை நிலவரம்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை நிலவரம் வருமாறு:- (கிலோவில்)

மல்லி- ரூ.2,400, சாமந்தி-ரூ.160, சம்பங்கி- ரூ.100, ஜாதிமல்லி- ரூ.1,500, அரளி- ரூ.400, ரோஸ் (சிவப்பு) - ரூ.180, பன்னீர் ரோஸ்- ரூ.160, செண்டுமல்லி- ரூ.70 முதல் ரூ.80 வரை, கோழிக்கொண்டை- ரூ.80 முதல் ரூ.100 வரை, முல்லை- ரூ.1,500, காக்கடா (வாசமில்லா காட்டுமல்லி) - ரூ.1,500, டிசம்பர் பூ- ரூ.400.


Next Story