ஓசூரில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை


ஓசூரில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 20 Aug 2023 7:00 PM GMT (Updated: 20 Aug 2023 7:01 PM GMT)
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் அலசநத்தம் வெங்கடேஷ் நகரை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 60). விவசாயி. இவருடைய மகன் மணி (35). கடந்த சில நாட்களுக்கு முன்பு ராயக்கோட்டை அருகே விவசாயி மாரியப்பன் (75) என்பவர் மாயமானார். இதுதொடர்பாக ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் மாரியப்பன் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து கொலை வழக்காக ராயக்கோட்டை போலீசார் மாற்றினர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், சொத்து பிரச்சினையில் முதியவர் மாரியப்பனை, மணி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மணியை போலீசார் தேடி வந்தனர்.

இதற்கிடையே மணியை போலீசார் தேடி வந்ததை அறிந்த வெங்கட்ராமன் கொலை தொடர்பாக உறவினர்கள் நம்மிடம் கேட்பார்களே என பயந்து கடந்த 18-ந் தேதி இரவு வீட்டில் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெங்கட்ராமன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுதொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story