தேர்வில் தோல்வி அடைந்ததால்கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


தேர்வில் தோல்வி அடைந்ததால்கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 2 Oct 2023 7:00 PM GMT (Updated: 2 Oct 2023 7:00 PM GMT)
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி அருகே தேர்வில் தோல்வி அடைந்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவி

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள முத்தம்பட்டி கிருஷ்ண கவுண்டனூரை சேர்ந்தவர் மாது. லாரி டிரைவர். இவருக்கு வினோத்குமார் (24) என்ற மகனும், ஜெய ஹரிணி (19) என்ற மகளும் இருந்தனர்.

இதில் ஜெயஹரிணி கோவையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் அவர் கல்லூரியில் நடந்த தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

தற்கொலை

இதனை தொடர்ந்து மாது கோவைக்கு சென்று மகளை அழைத்து கொண்டு ஊருக்கு வந்தார். எனினும் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் இருந்த ஜெயஹரிணி நேற்று காலை வீட்டின் மேற்கூரையில் உள்ள குழாயில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொம்மிடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தேர்வில் தோல்வி அடைந்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் முத்தம்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story