பரமத்திவேலூர் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


பரமத்திவேலூர் அருகே  தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 20 Oct 2022 6:45 PM GMT (Updated: 20 Oct 2022 6:46 PM GMT)

பரமத்திவேலூர் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

நாமக்கல்

பரமத்திவேலூர் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தொழிலாளி

பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). வெற்றிலை கொடிக்கால் தொழிலாளி. இவருடைய மனைவி பங்கஜவள்ளி (50). இந்த நிலையில் ரவிச்சந்திரன் வெற்றிலை கொடிக்கால் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு மது குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த ரவிச்சந்திரன் கடந்த 3 நாட்களாக வீட்டுக்கு வராமல் இருந்தாராம். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பரமத்திவேலூர் செல்லாண்டியம்மன் கோவில் எதிரே உள்ள ஒரு டீக்கடையின் அருகே ஒருவர் இறந்து கிடப்பதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

விசாரணை

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணையில் இறந்து கிடந்தவர் காணாமல் போன ரவிச்சந்திரன் என்பதும், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ரவிச்சந்திரனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்றனர். பின்னர் ரவிச்சந்திரனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story