நாமக்கல் அருகேகோழிப்பண்ணை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை
நாமக்கல் அருகே கடன் தொல்லையால் கோழிப்பண்ணை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோழிப்பண்ணை அதிபர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வையப்பமலை அடுத்த மொரங்கம் பொல்லாங்காட்டை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மகன் யுவராஜ் (வயது 53). இவர் நாமக்கல்லில் உள்ள மோகனூர் சாலை திருநகர் காலனியில் வசித்து வந்தார்.
இவர் வள்ளிபுரம் அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டதோடு, கடன் அதிகமாகிவிட்டதாக கூறப்படுகிறது. அதனால் மன உளைச்சலில் யுவராஜ் இருந்து வந்தார்.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் கோழிப்பண்ணையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.