ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும் - தமிழக டிஜிபி எச்சரிக்கை


ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும் - தமிழக டிஜிபி எச்சரிக்கை
x

ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டு வர்த்தகம் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஆன்லைன் விளையாட்டு வர்த்தகத்தின் வருவாய் ரூ10,100 கோடி என அகில இந்திய கேமிங் சம்மேளனம் ஆன பிக்கி தெரிவித்து இருந்தது. அதேபோல், வரும் 2023ஆம் ஆண்டு ஆன்லைன் விளையாட்டு வர்த்தகத்தின் வருவாய் ரூ20,000 கோடியாக இருக்கும் என்றும் தெரிவித்து இருந்தது.

இதனிடையே கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் பணம், நகைகளை பலர் இழந்து வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதில், சிலர் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சிலர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி அதில் இருந்து மீள முடியாமல் சிக்கி தவிக்கிறார்கள்.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், "சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டு எனும் மோசடி அதிகளவில் நடந்து வருகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு முதலில் ஜெயிப்பது போல ஆசையை தூண்டிவிட்டு, பின்பு அனைத்து பணத்தையும் இழக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பிடித்த நடிகர்கள் ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் வருவதை பார்த்து ஏமாந்து யாரும் இந்த மோசடியில் சிக்க வேண்டாம்.

இது ஆன்லைன் ரம்மி அல்ல. மோசடி ரம்மி. ஆன்லைன் ரம்மி விளையாடும் நபர்களுக்கு அவமானம், குடும்பப் பிரச்னை மற்றும் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்படும். எனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் யாரும் ஈடுபட வேண்டாம்" என்று அவர் கூறினார்.







Next Story