தென்காசியில் கோடை மழை- வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி


தென்காசியில் கோடை மழை- வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 9 April 2023 6:45 PM GMT (Updated: 9 April 2023 6:47 PM GMT)

தென்காசி, நெல்லையில் கோடை மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தென்காசி

தென்காசி, நெல்லையில் கோடை மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மிதமான மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் அவ்வப்போது சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் சில இடங்களில் கோடை மழை பெய்தது.

இந்த நிலையில் நெல்லையில் நேற்று அதிகாலையில் லேசான மழை பெய்தது. பின்னர் காலை 10.30 மணியளவிலும் இடி, மின்னலுடன் மிதமான கோடை மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் லேசான மழை பெய்தது.

தென்காசி

தென்காசியில் நேற்று மதியம் 2.30 மணியளவில் பலத்த மழை பெய்தது. இடி, மின்னலுடன் சுமார் 1 மணி நேரம் நீடித்த மழையால் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.

செங்கோட்டையில் மதியம் 2 மணி முதல் 3.30 மணி வரையிலும் இடி-மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. கோடை மழையால் வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மழை அளவு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

பாபநாசம்-20, சேர்வலாறு-2, மணிமுத்தாறு-9, ராமநதி-6, குண்டாறு-6, அடவிநயினார்-2, செங்கோட்டை-11, தென்காசி -2.


Next Story