அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x

அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆய்வு செய்தார்.

மதுரை

அலங்காநல்லூர்

அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆய்வு செய்தார்.

ஜல்லிக்கட்டு

தைப்பொங்கல் வந்தாலே கூடவே ஜல்லிக்கட்டு விழாவும் வந்துவிடும். அதன்படி இந்த ஆண்டு வருகிற 15-ந் தேதி அவனியாபுரத்திலும், 16-ந்தேதி பாலமேட்டிலும், 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு விழாக்கள் நடைபெற உள்ளன.

இதை தொடர்ந்து பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா பணிகளை பாலமேடு கிராம பொதுமகாலிங்க சுவாமி மடத்துக்கமிட்டியினர் மற்றும் பாலமேடு பேரூராட்சி நிர்வாகம் இணைந்து செயல்பட தொடங்கி விட் டனர்.

அதன்படி பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் மஞ்சமலை சுவாமி ஆற்று வாடிவாசல் முன்பு தயார்படுத்தும் பணி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து மைதானத்தை தூய்மைபடுத்தும் பணி பொக்லைன் எந்திரம் மூலம் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த பணிகள் நடைபெறும் போது பாலமேடு பேரூராட்சி தலைவர் சுமதிபாண்டியராஜன், செயல் அலுவலர் தேவி, துணை தலைவர் ராமராஜன், மற்றும் கவுன்சிலர்கள், பேரூராட்சி பணியாளர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

முன்னதாக பாலமேடு ஜல்லிக்கட்டு விழா நடைபெறும் இடம் வாடிவாசல், மாடுகள் நிறுத்துமிடம், சேருமிடம், மருத்துவ பரிசோதனை செய்யும் இடம், பார்வையாளர்கள் அமரும் மாடம், காளைகள் ஓடும் மைதானம் மற்றும் பல்வேறு பகுதிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், துணை சூப்பிரண்டு பாலசுந்தரம் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது மடத்து கமிட்டி தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதி தங்கமணி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

அலங்காநல்லூர்

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் நிருபர்களிடம் கூறும் போது, இந்த ஆண்டு வழக்கம் போல் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அரசு வழிகாட்டுதல்படி அனைத்து பணிகளும் நடைபெறும் என்றார்.

பின்னர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தையும், அனைத்து பகுதிகளையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டார்.அப்போது விழாக்குழுவினர், பேரூராட்சி, போலீஸ் அதிகாரிகள், கிராம மக்கள் உடன் இருந்தனர்.


Next Story