பொன்.மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு


பொன்.மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு
x

பொன்.மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்து பொன். மாணிக்கவேல், தனக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி கிருஷ்ணா முராரி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. ஏற்கெனவே இந்த மனு கடந்த நவம்பர் 24-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பொன். மாணிக்கவேலுக்கு எதிரான சிபிஐ விசாணைக்கு தடைவிதிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது. மேலும், மேல்முறையீட்டு மனு தொடர்பாக 3 வாரத்திற்குள் பதில் அளிக்க தமிழ்நாடு அரசு, சிபிஐ, எதிர் மனுதார் காதர் பாட்ஷாக்கும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்டில் இந்த வழக்கும் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக தமிழக அரசு மற்றும் சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

அப்போது குறுக்கிட்ட பொன். மாணிக்கவேல் தரப்பு மூத்த வழக்கறிஞர் நாகமுத்து, வழக்கின் அடுத்த கட்டவிசாரணை வரைக்கும் சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.


Next Story