ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

திருச்சி அருகே வீட்டுமனை தனி பட்டா வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருச்சி அருகே வீட்டுமனை தனி பட்டா வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
தனி பட்டா
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 51). இவர் திருவானைக்காவல் பகுதியில் சொந்தமாக செல்போன் உதிரி பாகங்கள் கடை நடத்தி வருகிறார். இவருக்கு கல்பாளையம் கிராமத்தில் சொந்தமாக வீடு உள்ளது. ரமேஷ்குமார் தனது தொழிலுக்கு பணம் தேவைப்பட்டதால் தனக்கு சொந்தமான வீட்டின் பேரில் வங்கியில் கடன் கேட்டுள்ளார்.
ஆனால் வங்கி தரப்பினர் ரமேஷ்குமாரிடம், உங்களது வீட்டுமனையை உட்பிரிவு செய்து பட்டா பெற்று வருமாறு வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ரமேஷ்குமார் தனது வீட்டினை உட்பிரிவு செய்து தனி பட்டா கேட்டு கடந்த ஜூலை மாதம் மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
விண்ணப்பித்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் எந்த தகவலும் கிடைக்கப் பெறாததால் ரமேஷ்குமார் கடந்த மாதம் 28-ந்தேதி மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள சர்வே பிரிவுக்கு சென்று கல்பாளையம் பிர்கா சர்வேயர் கருப்பையா (48) என்பவரை சந்தித்து, தனது விண்ணப்பத்தின் பேரில் உட்பிரிவு செய்து கொடுக்க கேட்டுள்ளார்.
ரூ.5 ஆயிரம் லஞ்சம்
அதற்கு பிர்கா சர்வேயர் கருப்பையா ஒரு வாரம் கழித்து தன்னை வந்து சந்திக்குமாறு கூறியுள்ளார். அதன்பேரில் ரமேஷ் குமார் கடந்த 5-ந்தேதி பிர்கா சர்வேயர் கருப்பையாவை சந்தித்து தனது வேலையை முடித்துக் கொடுக்குமாறு கூறியுள்ளார். அதற்கு சர்வேயர் கருப்பையா ரூ.6 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் தனிப்பட்டாவுக்கான வேலையை முடித்து தருவதாக கூறியுள்ளார். பின்னர் ரமேஷ் குமார் கேட்டுக் கொண்டதன் பேரில் ரூ.1,000 குறைத்துக் கொண்டு ரூ.5 ஆயிரம் கேட்டுள்ளார். இதையடுத்து ரமேஷ்குமார் 3 நாட்களில் பணத்துடன் வந்து சந்திப்பதாக சொல்லிவிட்டு சென்றார்.
இதனிடையே லஞ்சம் கொடுக்க விரும்பாத ரமேஷ் குமார் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டனிடம் புகார் அளித்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆலோசனையின் பேரில் நேற்று ரமேஷ் குமார் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.5 ஆயிரத்தை நேற்று மதியம் சுமார் 12 மணியளவில் சமயபுரம் பைபாஸ் சாலையில் வைத்து கருப்பையாவிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கருப்பையாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.