தரமான மூலப்பொருட்களை கொண்டு இனிப்பு, கார வகைகள் தயாரிக்க வேண்டும்


தரமான மூலப்பொருட்களை கொண்டு இனிப்பு, கார வகைகள் தயாரிக்க வேண்டும்
x
தினத்தந்தி 22 Oct 2022 11:41 AM GMT (Updated: 22 Oct 2022 1:21 PM GMT)

தரமான மூலப்பொருட்களை கொண்டு இனிப்பு, கார வகைகளை தயாரிக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

தரமான மூலப்பொருட்களை கொண்டு இனிப்பு, கார வகைகளை தயாரிக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தரமான...

தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் இனிப்பு, கார வகைகள் செய்து உண்டு மகிழ்வார்கள். பலர் கடைகளில் வாங்குவார்கள். இனிப்பு, கார வகைகளை விற்பனை செய்பவர்கள் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு சான்றிதழ் பெறுவது அவசியம். தற்காலிகமாக இனிப்பு தயாரிப்பவர்களும், திருமண மண்டபங்களில் தயாரிப்பவர்களும் பதிவு, உரிமம் பெறுவது அவசியம். தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, கார வகைகளை தயாரிக்க தரமான மூலப் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தரமான எண்ணெய், நெய் பயன்படுத்த வேண்டும். ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. தயாரித்த இனிப்பு, கார வகைகளை கண்ணாடி பெட்டிக்குள் மூடி வைத்து விற்பனை செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட நிறமிகளை (கலர்) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கார வகைகளில் நிறமிகளை பயன்படுத்தக்கூடாது. மேலும் இனிப்பு, கார வகைகளை விற்பனை கூடத்தில் வைக்கும் போது அதன் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதியை அச்சிட்டு ஒட்டிருக்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விபரச்சீட்டு குறிப்பிடும் போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர் தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலாவதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இனிப்பு மற்றும் கார வகைகளை பேக்கிங் செய்து நுகர்வோருக்கு கொடுக்கும் போது உணவு சேமிப்புக்குரிய தரத்துடன் உள்ள பிளாஸ்டிக் கொள்கலன்களையே பயன்படுத்த வேண்டும்.

உணவு கையாளுதல் மற்றும் பரிமாறுதல் ஆகிய பணிகளை செய்பவர்கள் கையுறைகள் மற்றும் தலைக்கவசம், மேலங்கிகள் ஆகியவற்றை அணிய வேண்டும். பொட்டலமிடும் உணவு பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளரின் முகவரி, உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தின்கீழ் அச்சிட்டு விற்பனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story